“உணவை
ஆயுதமாக பயன்படுத்த முடியுமெனில் அதை மகிழ்ச்சியுடன் செய்வோம்!”
–ஏர்ல் பட்ஸ்,
அமெரிக்காவின் முன்னாள்
வேளாண்துறை அமைச்சர்
இந்தியாவின் பிரதான உணவுப்
பொருளான நெல்லில் தற்போது எத்தனை வகைகள் இருக்கின்றன தெரியுமா? என்று ஒரு தற்கால விவசாயியிடமோ, நெல் மண்டிக்காரரிடமோ விசாரித்தால் அதிகபட்சமாக
சுமார் 100 நெல்வகைகளை பட்டியலிடக்கூடும்.
ஆனால் இந்தியாவில் சுமார்
ஒரு இலட்சத்து 20 ஆயிரம் நெல் வகைகள் இருந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
விளையும் பகுதியின் மண்வளம், தட்பவெப்ப நிலை உள்ளிட்ட காரணிகளுக்கேற்ப இயற்கையில்
உருவான இத்தனை நெல்வகைகளையும் நமது முன்னோர்கள் அடையாளம் கண்டு பட்டியலிட்டு,
பாதுகாத்து, பயன்படுத்தி வந்துள்ளனர். இவை அனைத்தும் எங்கே சென்றன?
அரிசி உணவுக்கு தொடர்பே
இல்லாத அமெரிக்க பெருமுதலாளிகள் இணைந்து 1960ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் ஆரம்பித்த
பன்னாட்டு நெல் ஆராய்ச்சி மையத்தின் சதித்திட்டம் காரணமாகவே நமது பாரம்பரிய நெல்
ரகங்கள் திட்டமிட்டு திருடப்பட்டு, அழிக்கப்பட்டு உயர் விளைச்சல் ரகங்கள் என்ற
பெயரில் தரமில்லாத நெற்பயிர்கள் இங்கே இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இதில் வேளாண்
நிபுணர் என்று போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் முக்கிய பங்காற்றியதாகவும்
கோவாவைச் சேர்ந்த பிரபல சூழலியல் ஆர்வலர் கிளாட் ஆல்வாரிஸ் “A Great Gene Robbery”
என்ற கட்டுரையில் குற்றம் சாட்டியுள்ளார்.
+++
உத்தரபிரதேச மாநிலத்தில்
உள்ள பால்லியா மாவட்டத்தில் பல்லாண்டுகாலமாக பயிரிடப்பட்டு வரும் பார்லி (வால்
கோதுமை) பயிருக்கு ஜப்பானில் உள்ள சப்போரா என்ற மதுபான ஆலை பேடன்ட் உரிமை
பெற்றுள்ளது.
பார்லி என்ற சிறுதானியம் வட
இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாகும். புரதச்சத்தும்,
மேலும் பல சத்துகளும் மிகுந்த பார்லி தமிழ்நாட்டிலும்கூட பிரபலமாகி வருகிறது.
குறிப்பாக பால்லியா
மாவட்டத்தில் பயிர் செய்யப்படும் பார்லி பல சிறப்புத்தன்மைகளை கொண்டதாக
வல்லுனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த பார்லியில் லிபோசைனேஸ்-1 என்ற என்ஸைம்
குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த பார்லியில் தயாரிக்கப்படும் பீர் எனப்படும்
மதுபானம் நீண்ட நாட்களுக்கு புதுப்பொலிவோடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் தேசிய
பல்கலைக்கழகமான ஓகயாமா பல்கலைக்கழகத்தின் விதை வங்கியில் இந்த பார்லி விதைகளை கண்ட
சப்போரா நிறுவனம் இதற்கு பேடன்ட் உரிமை பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த சப்போரா
மதுபான நிறுவனம், பன்னாட்டு விதை நிறுவனமான கார்கில் நிறுவனத்துடன் இணைந்து
செயல்படுகிறது.
சுமார் 100 ஆண்டுகளுக்கும்
மேலாக உத்தரபிரதேசம், பால்லியா மாவட்டத்தில் பயிரிடப்பட்டுவந்த பார்லி பயிருக்கு,
ஜப்பான் நாட்டின் சப்போரா நிறுவனம்
பேடன்ட் உரிமை பெற்றதில் பால்லியா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நற்பயனும்
ஏற்படவில்லை. அதற்கு பதிலாக இனி இப்பகுதி விவசாயிகள் அந்த பார்லி பயிரை
பயிரிடுவதற்கு சப்போரா நிறுவனத்திற்கு ராயல்டி செலுத்தும் நிலை ஏற்படலாம்.
இது ஒரு சிறிய உதாரணம்தான்!
இதைப்போல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறப்பியல்பு வாய்ந்த பல்வேறு பல்லுயிர் இயற்கை
வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் “அறிவுசார் சொத்து”
உரிமையாகின்றன.
1994ம் ஆண்டில் வர்த்தகம் தொடர்பான அறிவுசார்
சொத்துரிமைக்கான பன்னாட்டு ஒப்பந்தம் [Agreement on Trade Related Aspects of
Intellectual Property Rights (TRIPS)] கையெழுத்தானதை
தொடர்ந்து உலக வர்த்தகத்தின் போக்கே திசை மாறியது. இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய
நாடாளுமன்றத்தில் எவ்விதமான விவாதமும் நடத்தப்படாமலே, யாருக்கும் எந்த விளக்கமும்
அளிக்கப்படாமலே இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது..! (இந்த
நாடாளுமன்ற தேர்தலில்தான் நாம் அனைவரும் கடமை உணர்வுடன் வரிசையில் நின்று
வாக்களித்து நம் விரலை கறைப்படுத்திக் கொண்டுள்ளோம்)
இந்தியாவின் அரசியலமைப்பு
சட்டக்கோட்பாடுகளுக்கு எதிரான பல அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து
இதுவரை தேவையான அளவில் எத்தரப்பிலும் விவாதங்கள் நடைபெறவில்லை என்பதே உண்மை.
இந்தியாவில் நடைமுறையில்
இருந்த பல மனித உரிமைக்கூறுகளை இந்த ஒப்பந்தம் கேள்விக்குறியாக்குகிறது. கல்வி,
மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தனியார்மயமாக்கி அதற்கான விலை
கொடுப்பவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குகிறது. ஆனால் இது
குறித்த எந்த விமரிசனங்களும் நடத்தாமல் ஆண்டுதோறும் ஏப்ரல் 26ம் தேதியன்று
அறிவுசார் சொத்துரிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அறிவுசார் சொத்துரிமை
என்ற கருத்தாக்கம் வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளை
தலைகீழாக புரட்டிப்போடுகிறது என்றே சொல்லலாம்.
அறிவுசார் சொத்துரிமையின்
ஒரு மிகமுக்கியமான பிரிவு பேடன்ட் என்று அழைக்கப்படும் புத்தாக்க உரிமையாகும்.
புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தும் ஒருவருக்கு அதற்கான
அங்கீகாரத்தையும், பொருளியல் ரீதியான பலனையும் கொடுப்பதன் மூலம் மென்மேலும்
கண்டுபிடிப்புகள் நிகழும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த பேடன்ட் உரிமை
உருவாக்கப்பட்டது.
இயற்கையில் உருவாகாத,
புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய பொருளை அதற்கான பயன்பாட்டுடன் கண்டுபிடிக்கும்
ஒருவருக்கு இந்த பேடன்ட் உரிமை வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில்
இயற்கையில் உருவாகும் தாவர வகைகளுக்கோ, விலங்குகளுக்கோ, அவற்றின் உறுப்புகளுக்கோ
பேடன்ட் உரிமை வழங்கக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது.
எனினும் பெரும்
வர்த்தகக்கழகங்களின் நிர்பந்தகளால் இந்த தடையில் ஆங்காங்கே ஓட்டைகள்
உருவாக்கப்பட்டன. இதன்படி தாவர, விலங்குகளின் அணு(Cell)க்களில்
மனிதத்தலையீடு மூலம் மாற்றம் இருந்தால் அந்த குறிப்பிட்ட அணுக்களுக்கு பேடன்ட்
உரிமை வழங்கலாம் என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து தாவர,
விலங்குகளின் மரபணுக்களில் மனிதத் தலையீடு மூலமாக மாற்றம் செய்யும் மரபணு மாற்றுத்
தொழில்நுட்பத்திற்கு பேடன்ட் வழங்கும் முறை அமலுக்கு வந்தது. இதை ஆயுதமாக
பயன்படுத்தும் மான் சான்டோ உள்ளிட்ட பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் உலகில் உள்ள
அனைத்து தாவரங்களையும், விலங்குகளையும் தம் அறிவுசார் சொத்துரிமை என்று பதிவு
செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள
பாரம்பரிய தாவர வகைகளை ஏதோ ஒரு விதத்தில் தமது அறிவுசார் சொத்துரிமையாக பதிவு
செய்து, அவற்றின் உண்மையான உரிமையாளர்களான விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்பாட்டிலும்
அந்த நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
பேடன்ட் என்ற பெயரில் பெரும் வர்த்தக்கழகங்கள் உலகில் உள்ள அனைத்து தாவர,
விலங்குகளையும் தமதாக்கிக் கொள்ளும் சதித்திட்டத்தை உணர்ந்த பல தரப்பினரும்
மேற்கொண்ட போராட்டத்தை
தொடர்ந்து விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பது என்ற பெயரில் சில சட்டங்களை உலக
வர்த்தகக் கழகம் அறிமுகம் செய்தது.
இத்தகைய ஒரு சட்டம்
இந்தியாவில் அமல் செய்யப்படும் விதத்தைப் பார்ப்போம்.
கடந்த 2002ம் ஆண்டில்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டம், பல்லுயிரியச் சட்டம், 2002 (The
Biological Diversity Act, 2002) ஆகும். இந்தியாவின் வளங்களில்
ஒன்றான பல்வகைப்பட்ட தாவர, விலங்கு உயிரினங்களையும் இவற்றை போற்றி பாதுகாத்து
வரும் பாரம்பரிய அனுபவம் மற்றும் நவீன அறிவியல் அறிவு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக இந்த
சட்டம் கொண்டுவரப்பட்டதாக இந்த சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும்
இந்த செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களோ, வேறு அமைப்புகளோ வணிக ரீதியில்
பயன்படுத்தும்போது பன்னெடுங்காலமாக இவற்றை போற்றி பாதுகாத்த மக்களுக்கு உரிய
பொருளாதார பலனை அளிப்பதற்கு (Benefit sharing) வழிகாணும்
நோக்கமும் இந்த சட்டத்தின் முக்கிய அம்சம் என்று இச்சட்ட முன்னுரையில்
கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில்
தேசிய பல்லுயிரிய ஆணையம் அமைத்தல், மாநில பல்லுயிரிய ஆணையங்களை அமைத்தல் இவற்றின்
கட்டுப்பாட்டில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து அளவிலும் பல்லுயிரிய மேலாண்மைக்
குழுக்களை (Bio-Diversity Management Committee)
அமைத்தல், இக்குழுக்களின் மூலம் மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s
Bio-Diversity Register) உருவாக்கி பராமரித்தல் உள்ளிட்டவற்றை
நடைமுறைக்கு கொண்டுவருவதே பல்லுயிரியச் சட்டம், 2002-இன் நோக்கமாகும்.
இதன் மூலம் இந்தியாவின்
பாரம்பரிய தாவரங்களையோ, விலங்குகளையோ பன்னாட்டு வணிக நிறுவனங்கள் எந்த வகையிலும்
களவாடி பேடன்ட் உரிமை பெறுவதை தடுப்பதே இந்த சட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
மத்திய அரசின் சார்பில்
அமைக்கப்பட்ட தேசிய பல்லுயிரிய நிறுவனம் சென்னையில்தான் இயங்குகிறது. மேலும்
அனைத்து மாநிலங்களிலும் மாநில பல்லுயிரிய ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின்
செயல்பாடுகள்தான் பெருமளவில் கேள்விக்குரியதாக உள்ளது.
பல்லுயிரிய
பாதுகாப்புக்கான அடிப்படை அலகு உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கும் பல்லுயிரிய
பாதுகாப்பு குழுவாகும். பெண்களுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் உரிய கட்டாய இட
ஒதுக்கீட்டை அளிக்கும் இந்த குழுவின் முக்கியமான பணி, மக்களுடைய பல்லுயிரிய
பதிவேடு (People’s Bio-Diversity Register) உருவாக்கி
பராமரித்தல் ஆகும். அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்களோ, அவற்றின் பிரதிநிதிகளோ
இந்தியாவின் பாரம்பரிய செல்வங்களான தாவர வகையையோ, விலங்கு வகையையோ எவ்விதத்தில்
பதிவு செய்தாலும் அதைக் கண்டறிந்து தடுக்க முடியும்.
இந்தியாவின் பாரம்பரிய
உரிமையான தாவரங்களையோ, விலங்குகளையோ வணிக நோக்கில் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசிய
தேவை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் லாபத்தில் அந்த அரிய வகை உயிரினத்தை பாதுகாத்து
வைத்திருக்கும் சமூக மக்களுக்கும் உரிய பங்கை பெறுவதற்காகவே (Benefit
sharing) இத்தகைய மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s
Bio-Diversity Register) பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த பல்லுயிரிய
பாதுகாப்புக் குழு கேரளா போன்ற சில மாநிலங்களில் மிகச்சிறப்பாகவும், தமிழ்நாடு
போன்ற பல மாநிலங்களில் மிகவும் கவலைக்குரிய விதத்திலும் செயலாற்றி வருகின்றன.
பல்லுயிரிய பாதுகாப்பு
குறித்த விவகாரங்களில் தமிழ்நாட்டின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. நமது
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள்
பல்லுயிரிய பாதுகாப்பில் மிகச்சிறப்பான கவனம் செலுத்தி வருகின்றன.
உள்ளாட்சி அமைப்புகள்
ரீதியாக செயல்படவேண்டிய பல்லுயிரிய பாதுகாப்புக்குழுக்கள் மத்திய பிரதேசத்தில் மிக
அதிக எண்ணிக்கையாக 23,743ம், கர்நாடகத்தில் 4,493ம், கேரளாவில் 1043ம் இயங்கி
வருகின்றன. தமிழ்நாட்டிலோ வெறும் 13 பல்லுயிரிய பாதுகாப்புக்குழுக்களே இருப்பதாக
தேசிய பல்லுயிரிய ஆணைய இணையம் தெரிவிக்கிறது.
இந்த பல்லுயிரிய
பாதுகாப்புக்குழு சார்பில் உருவாக்கப்பட்ட மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s
Bio-Diversity Register)-இன் எண்ணிக்கையை பார்ப்போம். மத்திய
பிரதேசத்தில் 741, கேரளாவில் 670, கர்நாடகத்தில் 267 மக்கள் பல்லுயிரிய பதிவேடுகள்
உருவாக்கப்பட்டு அம்மாநிலங்களின் பாரம்பரிய பல்லுயிரிய செல்வங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு மக்கள் பல்லுயிரிய பதிவேடுகூட (People’s
Bio-Diversity Register) உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை.
பல்லுயிரிய
பாதுகாப்புக்குழு இயங்கும் இடங்களில்கூட அதற்கான அதிகாரங்களோ, நிதி ஆதாரங்களோ
வழங்கப்படாமல் தடுக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் பல்லுயிரிய
பதிவேடு (People’s Bio-Diversity Register)-இன் சட்ட
அதிகாரம் வரையறுக்கப்படாமல் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இதுவரை உள்ளது.
இந்தக்குறைகளை நிவர்த்தி
செய்ய வேண்டி நாடு முழுவதும் உள்ள சுமார் 300 சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை
அமைப்புகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட மனு ஒன்று கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர்
8ம் தேதியன்று, அன்றைய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ. ராசா
அவர்களிடம் நேரில் அளிக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த மனு
இதுவரை யார் கண்ணிலும் படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள்
மற்றும் மக்களின் இத்தகைய பொறுப்பற்ற போக்கின் காரணமாகவே, இந்த கட்டுரையில் நாம்
ஏற்கனவே பார்த்ததுபோல உத்தரபிரதேச பார்லி பயிருக்கு, ஜப்பான் நாட்டு மதுபான
நிறுவனம் பேடன்ட் உரிமை பதிவு செய்கிறது. நம் நாட்டு வேம்புக்கும், பாசுமதி
அரிசிக்கும் இன்னும் பல இயற்கை வளங்களுக்கும் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள்
உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலும்கூட பேடன்ட் உரிமைக்கான பதிவுகளை மேற்கொண்டு
வருகின்றன.
இதற்காகவே மரபணு மாற்றுத்
தொழில் நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் பல்வேறு முறைகேடுகளோடு அறிமுகம்
செய்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட இயற்கை செல்வங்களைக் கொண்ட நாடுகளின்
பாரம்பரிய செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாக்கும் பேடன்ட் உரிமை பதிவு
செய்யும் முறைகள் அனைத்து நாடுகளிலும் மிகவும் செம்மையாக செயல்பட்டு வருகிறது. இது
குறித்த எந்த அடிப்படை புரிதலும் இன்றி தேசிய பல்லுயிரிய ஆணையத்தின் முன்னாள்
தலைவர் கண்ணையன் அவரது அலுவலக ரீதியான கடமையையும் பொறுப்புகளையும் மறந்துவிட்டு,
“மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை வேளாண்துறையில் பயன்படுத்துவதன் மூலமே உணவு
உற்பத்தியை பெருக்கி, ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க முடியும்” என்பது போன்ற
தவறான தகவல்களை பதிவு செய்வது மிகவும் கவலைக்குரியதாகும்.
இந்தியாவின் இயற்கை
பல்லுயிரிய வளங்களை பாதுகாப்பதற்காக கடந்த 2002ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டம்,
சுமார் 12 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த எந்த
முயற்சியும் எடுக்காமல் இருப்பதை அரசு அமைப்புகளின் தோல்வியாகக்கூட கருதலாம்.
இயற்கையின் கருணையாலும்,
மக்களின் கூட்டு உழைப்பாலும் உருவான இயற்கைச் செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களின்
கயமைத்தனத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட நடைமுறைகள் அனைத்தும் திட்டமிட்டு
பாழடிக்கப்படுகின்றன.
இந்தியாவின் இறையாண்மையை
பலியாக கேட்கும் இந்த சதித்திட்டங்கள் குறித்து அரசியல் கட்சியினருக்கோ, அதிகார
வர்க்கத்தினருக்கோ, வணிக ஊடகங்களுக்கோ, நீதித்துறைக்கோ, மக்கள் அமைப்புகளுக்கோ
எவ்விதமான அக்கறையுமில்லை.
என்ன செய்யப்
போகிறோம்?
-சுந்தரராஜன்
(E-Mail:
gmail@LawyerSundar.com)
5 கருத்துகள்:
நல்லதொரு கட்டுரை. பொது நல வழக்கை தொடுப்பதை பற்றி விளக்கலாமா?
Arumai
//இந்தியாவின் இறையாண்மையை பலியாக கேட்கும் இந்த சதித்திட்டங்கள் குறித்து அரசியல் கட்சியினருக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ, வணிக ஊடகங்களுக்கோ, நீதித்துறைக்கோ, மக்கள் அமைப்புகளுக்கோ எவ்விதமான அக்கறையுமில்லை. //
சரியா சொன்னீங்க .
பகிர்வுக்கு நன்றி .
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
/ ஒப்பந்தம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் எவ்விதமான விவாதமும் நடத்தப்படாமலே, யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்கப்படாமலே இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது..! (இந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் நாம் அனைவரும் கடமை உணர்வுடன் வரிசையில் நின்று வாக்களித்து நம் விரலை கறைப்படுத்திக் கொண்டுள்ளோம்)//
அய்யா !இது யாருக்கான எதற்கான பாராளுமன்றம் ?
கருத்துரையிடுக